Friday, October 15, 2010

வானொலிக்கால நினைவுகள் - 4

என்னைப் போன்றவர்களுக்கு எல்லாமே முதல் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் நிலை. வானொலி அறிவிப்பாளர் தேர்வில் இறுதிச் சுற்று வரை சென்றதாக ஞாபகம். ஆனால் முன்னாள் சிறுவர்மலர் நடிகர்கள் பலரும் தெரிவாகினார்கள். அவர்களுள் விமல் சொக்கநாதன், கோகிலவர்த்தனி சுப்பிரமணியம் (சிவராஜா) நடராஜசிவம், பி. எச். அப்துல் ஹமீட், ஜோர்ச் சந்திரசேகரன் போன்றவர்கள் அடங்குவர்.

தோற்றாலும் தகுதியுடையவர்களிடம் தோற்கவேண்டும் என்று சொல்வார்கள். எனவே பிற்காலத்தில் சிறந்த அறிவிப்பாளர்களாக பிரகாசித்த இவர்களுடன் போட்டியிட்டு தெரிவ செய்யப்படாமல் போனதில் எனக்கு வெட்கமொன்றும் இருக்கவில்லை.

1971ம் ஆண்டு. எனது கலை வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு. என்னைப்பொறுத்தவரையில் பல 'முதல்'களுக்கு சொந்தமான ஆண்டு. இதுவரை மற்றவர்களின் நாடகங்களில் நடித்து வந்த நான் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே முதன்முதலாக தயாரிப்பாளனாக ':சதுரங்கம்' மேடைநாடகத்தின் மூலம் மாறினேன்.

எஸ். எஸ். கணேசபிள்ளை, மறைமுதல்வன், கே. கந்தசாமி, சந்திரப்பிரபா மாதவன், ரோகினி போன்றவர்கள் என்னோடு நடித்தார்கள். கதிர்காமத்தம்பிணின் காட்சியமைப்பு, குறிப்பாக கிராமப்புற வீட்டின் வாசல் கடப்பு (கடவை என்றும் சொல்வார்கள்) நீண்டநாட்களாக பேசப்பட்ட தொன்றாயிற்று. நானே விளம்பரம் சேகரித்து, நாடக மலர் அடித்து (பறாளை பிரேமகாந்தன் என்பவரின் ரோஜாப்பூ சஞ்சிகை 'சதுரங்கம்' சிறப்பு மலர் வெளியிட்டது),

நானே ரிக்கற் விற்று, நானே கதாநாயகனாக நடித்து - இப்படி பல நானேக்களுக்குப் பிறகும். ஓரெயொரு ஆறுதல். மறைமுதல்வன் எழுதிய இந்த நாடகத்திற்கு நல்லபெயர் கிடைத்தது. பத்து வருடங்களுக்குள் வந்த சிறந்த பத்து நாடகங்களுக்குள் ஒன்றாக கே. எஸ். சிவகுமாரன் போன்ற விமர்சகர்கள் இந்த நாடகத்தை குறிப்;பிட்டார்கள்.

அடுத்த 'முதல்' – வானொலியில் தரமான விமர்சன சஞ்சிகை நிகழ்ச்சியாகக் கருதப்படும் 'கலைக்கோலம்' நிகழ்ச்சியில் முதன்முறையாக நான் கலந்த கொள்ளக் கிடைத்ததுதான். சிறந்த ஒலிபரப்பாளர்களில் (அறிவிப்பாளர்களோடு தயவசெய்து குழப்பிக்கொள்ளாதீர்கள் - Broadcasters) ஒருவராக நான் கருதும் காவலூர் ராசதுரை அப்போது 'கலைக்கோலம்' நிகழ்ச்சியை தயாரித்துக்கொண்டிருந்தார்.

பின்னர் இதே நிகழ்ச்சியை கலாநிதிகளான சிவத்தம்பி, கைலாசபதி, கவிஞர்கள் மகாகவி, சில்லையூர் செல்வராஜன் போன்ற வரிசையில் வந்து பட்டதாரி அறிவிப்பாளர்களான சற்சொரூபவதி நாதன், கமலினி செல்வராஜன் என்பவர்களைத் தொடர்ந்து 'விண் கூவும் பட்டத்தை'த் தவிர வேறு ஒரு பட்டமும் காணாத அடியேனும் கொஞ்சக்காலம் 'கலைக்கோலத்தை' தயாரித்து வழங்கியிருக்கிறேன்.

மீண்டும் விட்ட இடத்திற்கு வருகின்றேன். காவலூர் ராசதுரை அவர்கள் புதியவர்களை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதற்கு தயங்காதவர். மலிபன் கவிக்குரல் என்ற வர்த்தக நிகழ்ச்சி மூலம் 'ஈழத்து மெல்லிசைப்பாடல்கள்' உருவாகுவதற்கும் அதனால் எத்தனையோ கவிஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் புகழ்பெறவும் காரணமாய் இருந்தவர். புதியவர்கள் 'கலைக்கோலம்' மாதிரி நிகழ்ச்சிக்கு வந்து விட்டால் ஏதோ 'தீட்டு' பட்டுவிடும் என்று நினைப்பவரல்ல.

எங்களையெல்லாம் எடுத்த எடுப்பில் ஏதோ 'தொல்காப்பிய உரைக்கு' விமர்சனம், விளக்கம் வைக்கும் வேலையில் காவலூரார் ஈடுபடுத்தவில்லை. எங்களுக்கு தெரிந்ததை சொல்லும் வகையிலே ஒரு நாடக சம்பந்தமான உரையாடலுக்கே என்னை முதலில் அழைத்தார். தொடர்ந்த நிகழ்ச்சிகளிலே கலாவல்லுனர்கள், ஆசான்கள் எழுதிய கட்டுரைகளை வாசிக்க – ஆமாம்.. வாசிக்க வைத்தார்.

காலப்போக்கில் ஒரு நாடக விமர்சனம், ஒரு திரைப்பட விமர்சனம், ஒரு நாட்டிய விமர்சனம் என்று செய்யும்படி என்னைப் பணித்தார். நான் தயக்கம் காட்டியபோதும் அவர் ' ஒரு சராசரி பார்வையாளனாக உன் மனதில் பட்டதைச்சொல்.. போதும். ' என்று உற்சாகம் தந்து அனுப்பினார்.

சிங்கள நாடகாசிரியரான தயானந்த குணவர்த்தனாவின் 'நரி பானா' என்ற சிங்கள நாடகத்தை தழுவி எழுதப்பட்ட அந்த நாடகத்தின் பெயர் 'நரி மாப்பிள்ளை'. அது ஒரு குறியீட்டு நாடகம். தற்போது கனடாவில் வாழும் சின்னையா சிவனேசன் முதலானோர் நடித்த ஞாபகம். நான் புரிந்து கொண்டதைவிட, உணர்ந்து கொண்டதே அதிகம். என் விமர்சனத்தை முன்வைத்த பொழுது, சமபந்தப்பட்டவர்கள் யாருமே ஆட்சேபனைக்குரல் எழுப்பியதாக ஞாபகமில்லை.

அடுத்தது. 'வீட்டுக்கு வீடு' என்ற திரைப்பட விமர்சனம். ஜெய்சங்கர், லட்சுமி நடித்த ஒரு நகைச்சுவைப்படம். தியேட்டரின் இருளுக்குள்ளே யாரோ ஒருவன் (நான் தான்) கையில் ஒரு பேப்பர் துண்டை வைத்துக் கொண்டு அடிக்கடி குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்தவர்கள், இவன் யாரோ இந்தப்படத்தை பார்த்து கொப்பி அடித்து வேறு படம் செய்யப்போகிறானோ என்று நினைத்திருப்பார்கள்.

'விமர்சகனின் வேலை விளக்கம் அளிப்பதுதான். இப்படிச்செய்யுங்கள் என்று சிபார்சு செய்வதல்ல' என்று இயூஜின் அயனஸ்கோ சொன்னது மாதிரி நான் நடந்து கொண்டேன். நான் ரசித்தவற்றை தொட்டுக்காட்டியதுதான். நல்ல காலமாக 'இருப்பியல் வாதம்' 'பூர்சுவா' , 'சர்றியலிசம்' போன்ற சொற்களை பாவிக்கும் தேவை எனக்கு இருக்கவில்லை. நேயர்கள் தப்பினார்கள்.

சொற்கள் என்றவுடன் அண்மையில் காவலூராருடன் பேசக்கிடைத்தபோது பரிமாறிக்கொண்ட தகவல் ஞாபகத்திற்கு வருகின்றது. பத்மினியோடு எனக்குள்ள பிரச்சினைதான். நடிகை பத்மினியோடு அல்ல. அவர் பெயரோடு தான் தகராறே. பத்மினி என்பதில் வரும் 'ப'வை, Bha என்று தான் உச்சரிப்பேன். காவலூரரர் உச்சரிப்பு வகுப்பே நடத்திப் பார்த்தார். நான் டீhய விலே தான் நிற்பேன். கடைசியாக அவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கை நான் நடித்த நாடகத்தில் பத்மினி பாத்திரம் வராமல் பார்த்துக்கொண்டார். பத்மினி நடித்த படங்களுக்கு விமர்சனம் செய்யவே விடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் !

நாடகம், சினிமா என்று இறங்கியாகி விட்டது. இனி இசையில் கை வைப்பது தான அடுத்த வேலை. சாஸ்திரிய சங்கீதத்தில் கைவைத்து சங்கீதக்காரர்களிடம் குட்டு வாங்க நான் தயாராக இருக்கவில்லையாதலால், அப்போதுதான் காவலூரரின முயற்சியினால் முளை விட்டுக் கொண்டிருந்த 'மெல்லிசைப் பாடல்கள்' பற்றி, கலைக்கோலத்தில் கருத்துரை வழங்க நினைத்தேன். பாடகர்கள், பாடல் எழுதுபவர்கள், இசையமைப்பாளர்கள் என்று மெல்லிசையோடு சம்பந்தப்பட்டவர்களை தேடித்தேடிச் சந்தித்தேன்.

விபரங்கள், சிரமங்கள், முயற்சிகள் என்று என் குறிப்புப்புத்தகத்தை நிரப்பிக் கொண்டேன். நீண்டதொரு கட்டுரையாக விரிந்தது. சிறிய மழித்தலுக்குப் பிறகு கலைக்கோலத்தில், 'மெல்லிசைப்பாடல்கள்' என்ற கட்டுரை இடம்பெற்றதும், அதன் முழு வடிவமுமே பின்னர் 'ஞாயிறு சிந்தாமணியில்' வெளியிடப்பட்டதும் என் முயற்சிக்கு பலன் அளித்தது. வானொலியில் மெல்லிசைப்பாடல்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்த எம். எஸ். செல்வராஜா என்னைத் தேடி வந்து, அந்த கட்டுரையைப் பாராட்டிச் சென்றது ஞாபகமிருக்கிறது.

இனியென்ன நடனந்தான். இலங்கை சங்கீத நாட்டிய சங்க விழாவில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் செல்வி விஜயாம்பிகை இராமசாமி (இந்திரகுமார்) யின் நடன நிகழ்ச்சி. முதல் ஒரு வாரமாக கொழும்பு பொது நூல் நிலையத்தில் பரதநாட்டியம், குச்சுப்புடி சம்பந்;தமான அகப்பட்ட நூல்களையெல்லாம் வாசித்தேன். நிறைய தகவல்களை சேகரித்துக் கொண்டு நிகழ்ச்சி பார்க்கச் சென்றேன்.

நிருத்தம், நிருத்தியம், முத்திரைகள் என்ற வார்த்தைப்பிரயோகங்களுக்கு நிஜமாகவே அர்த்தம் தெரிந்து கொண்டது பலனளித்தது. 'பாவம்', 'ராகம்', 'தாளம்'என்ற மூன்று சொற்களின் முதலெழுத்துக்களுடன், இவற்றின் இறுதி எழுத்தான 'ம்' இணைந்தே 'பரதம்' என்ற சொல் உருவாகியிருக்கலாம் என்று விமர்சனத்தை தொடங்கினேன்.

இசைக்கலைஞர்களைப்பற்றி பத்திரிகைகளில் எழுதிவந்த நவாலியூர் சச்சிதானந்தன் இந்த ஆரம்ப வாக்கியத்தை, என்னைச் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் குறிப்பிட்டு சிலாகித்துக் கொள்வார்.

இன்னமொரு விஷயம் நிகழ்ந்தது. அந்நாட்களில் நாடகப்பயிற்சிக்காக சரஸ்வதி மண்டபத்திற்கு அடிக்கடி செல்வேன். நடனமாடிய விஜயாம்பிகையின் தந்தையார்; என்னைத்தேடி, அங்கு வந்து சென்றதாகச் சொல்லி, விமர்சனத்தில் ஏதாவது இசகு பிசகாகச் சொல்விட்டேனோ என்றும் என் நண்பர்கள் கேட்டு வைத்தார்கள்.

அவர் நேரில் என்னைச் சந்தித்தபோழுது எனக்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அவர் கேட்ட முதல் கேள்வி –'நீரா.. விமர்சனம் செய்தது..?' அவ்வளவுதான். ஏன் முகபாவனை அவருக்கு காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். 'இவ்வளவு இளவயதுக்காரரான நீர் தான் அந்த விமர்சனத்தை செய்திருப்பீர்; என்று நினைக்கவேயில்லை.' என்று வாழ்த்திச்சென்றார். (தொடரும்)

0 Comments:

Post a Comment

<< Home